கருப்பு நிற மக்களுக்கு எதிரான நிறவெறிக்கு எதிராக அமெரிக்காவில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் எமக்கும் வலுவானதொரு பாடத்தினைக் கற்றுக் கொடுப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககார குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் இடம்பெற்றுவரும் நிறவெறிக்கு எதரான போராட்டங்கள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் தனது பதிவில் மேலும் குறிப்பிடுகையில், நாட்டு மக்களது உணர்வுகளைத் தீர்மானிப்பது ஒருபோதுமே அரசாங்கங்களாக இருக்க முடியாது.
இனவெறி மற்றும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான போராட்டங்கள் அமெரிக்காவில் முன்னெடுக்கப்படுவது நம் அனைவருக்கும் ஒரு சக்திவாய்ந்த படிப்பினை ஆகும்.
நாம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், அது அமெரிக்கா, இலங்கை அல்லது வேறொரு நாடாக இருந்தாலும், நமது உணர்வுகளையும் உணர்திறனையும் தீர்மானிக்க வேண்டியது அரசு அல்ல. அது தனிப்பட்ட மக்களுடைய நிலைப்பாடு ஆகும்.
நாங்கள் எங்கள் பிரதிநிதிகளையும் எங்கள் சொந்த மக்களிடமிருந்தே தெரிவு செய்கின்றோம். அவர்கள் அரசாங்கத்தில் நடந்துகொள்ளும் முறைகளுக்கும் மக்களாகிய நாங்களே பொறுப்பு.
எங்கள் பலங்களும் பலவீனங்களும் ஒருவருக்கொருவர் நடத்தை மற்றும் எம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் நடத்தை ஆகியவற்றில் பிரதிபலிக்கின்றன.
எங்கள் தெரிவுகள் நாட்டினது அணுகுமுறைகள், செயல்கள், கொள்கை மற்றும் சட்டத்தை வழிநடத்துகின்றன.
எனவே சிறந்த அரசாங்கத்தையும் சிறந்த சமமான ஆட்சியையும் நிறுவ நாம் சிறந்த மனிதர்களாக இருக்க வேண்டும்” என முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககார மேலும் குறிப்பிட்டுள்ளார்.
