சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற ஒரு சில தினங்களில் அதற்கான காரணத்தை பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மொஹம்மத் ஆமிர் அவிழ்த்துவிட்டுள்ளார்.
28ஆவது வயதில் தான் ஓய்வு பெறுவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் இன்னும் சிலருமே காரணம் எனத் தெரிவித்து அவர் புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முகாமைத்துவதுமும் முன்னாள் வீரர்கள் சிலரும் என்னை மனோரீதியாக சித்திரவதை செய்ததால் அதை தாங்கிக்கொள்ள முடியாமல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து நான் 28 வயதிலேயே ஒய்வுபெறுவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கொடுத்த மனோரீதியான சித்திரவதைகளும் என் மீது அவப்பெயர் ஏற்படும்வகையில் பயிற்றுநர்களான வக்கார் யூனிஸ், மிஸ்பா உல் ஹக் ஆகியோர் செயற்பட்டமையுமே காரணம்’ என மொஹம்மத் ஆமிர் குறிப்பிட்டுள்ளார்.
‘பாகிஸ்தான் கிரிக்கெட் சபை என்னை மனோரீதியாக சித்திரவதை செய்வதால் அந்த சபைக்குக் கீழ் என்னால் விளையாட முடியாது. சர்வதேச ஒருநாள் மற்றும் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக எனது சிறந்த ஆற்றலை வெளிப்படுத்திவந்துள்ளேன். ஆனால், என்னுடைய பந்துவீச்சு குறித்து கிரிக்கெட் சபையினர் குறைகூறிக்கொண்டே இருந்தனர்’ என ஆமிர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
லங்கா பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் கோல் க்ளடியேட்டர்ஸ் சார்பாக பிரதான வேகப்பந்துவீச்சாளராக மொஹம்மத் ஆமிர் விளையாடியிருந்தார்.
தனது ஓய்வு குறித்து ஹம்பாந்தோட்டையிலிருந்தவாறு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த மொஹம்மத் ஆமிர், பாகிஸ்தான் சென்ற பின்னர் ஒய்வு பெற்றதற்கான காரணத்தைத் தெரிவித்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
