(எம்.மனோசித்ரா)
முஸ்லிம் மக்களை அரசியல் பழிவாங்குவதற்காக பௌத்தர்கள் எனக் கூறும் அடிப்படைவாதிகள் முஸ்லிம்களை வெறுப்புக்காக பழிவாங்குவது சிறந்ததல்ல.
எனவே, கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா விவகாரத்தில் சிறந்த தீர்மானமொன்றை எடுக்குமாறு அதிகாரத்திலுள்ளவர்களிடம் கோரிக்கை விடுப்பதாக முன்னால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
இன்று (20) காணொளி ஒன்றை வெளியிட்டு இவ்விடயம் தொடர்பில் வலியுறுத்தியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அதில் மேலும் கூறுகையில்,
நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எவ்வித அடிப்படையுமின்றி தகனம் செய்யப்படுகின்றமை தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதன் உண்மை தன்மை தொடர்பில் அறிந்து கொள்வதற்காகவே நான் இது வரையில் இவ்விடயம் குறித்து எவ்வித கருத்துக்களையும் வெளிப்படுத்தவில்லை.
அதற்கமைய உள்நாட்டு மற்றும் சர்வதேச விசேட வைத்தியர்களுடன் இவ்விடயம் பற்றி ஆலோசித்ததன் பின்னர் தற்போது இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிடுகின்றேன். இலங்கையில் எடுக்கப்பட்டுள்ள இந்த தீர்மானம் அடிப்படையற்றது.
காரணம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் பெட்டி இன்றி நிலத்தில் புகைப்பட்டாலும் மண் அல்லது நீர் மூலம் வைரஸ் மீண்டும் பரவ எவ்வித வாய்ப்பும் இல்லை என்று விஞ்ஞானபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் முக்கிய நாடுகளில் ஆய்வு செய்யப்பட்டு இந்த விடயம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் மக்கள் பல நூற்றாண்டுகளாக பின்பற்றி வரும் அவர்களது நம்பிக்கை நாட்டில் சிதைக்கப்பட்டுள்ளது. அவர்களது நம்பிக்கைக்கு ஏற்ப வாழ்வதற்கும் ,இறுதி சடங்குகளை செய்வதற்கும் அவர்களுக்கு உரிமை உள்ளது. அவ்வாறிருக்கையில் ஏன் அந்த மக்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக தகனம் செய்கின்றார்கள் ? அரசாங்கம் சரியான வகையில் விஞ்ஞானபூர்வமாக இதற்காக தீர்வொன்றை எடுக்க வேண்டும்.
கங்கையில் நீரைக் கொட்டுவதால் இந்த நோயை குணப்படுத்த முடியாது. விஞ்ஞானபூர்வமாகவே இதனை குணப்படுத்த முடியும். ஒரு புறம் முஸ்லிம் மக்களின் மனித உரிமைகளை நாம் மீறுகின்றோம். மறுபுறம் இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். எந்தவொரு மனிதனுக்கும் அவன் பின்பற்றும் மதமே அவனது வாழ்வில் பிரதானமாக தாக்கம் செலுத்துகிறது. எனவே இவ்வாறு மத நம்பிக்கையை மீறுவது நியாயமற்றதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
