உலகில் மிக அபாயமிக்கவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 4 உருமாறிய வைரஸ்களில் 3 வைரஸ்கள் இதுவரையில் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளதாக நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் மூலக்கூறு வைத்திய நிபுணர் பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.
இவை சமூகத்தில் பரவியுள்ளனவா என்பது குறித்து தொடர்ந்தும் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகில் மிக அபாயம் மிக்கவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 4 உருமாறிய வைரஸ்கள் பிரித்தானியா, தென் ஆபிரிக்கா, பிரேஸில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வைரஸ்கள் ஏனைய வைரஸ்களைவிட பரவும் வேகம் மிக அதிகமாகக் காணப்படும் என அவர் தெரிவித்தார்.
மேலும் இதன்மூலம் ஏற்படும் பாதிப்புக்களும் மரணங்களும் அதிகரிப்பதோடு, தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதாலேயே இவை அபாயமுடையவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனவே, பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக அன்றி வேறு எந்த காரணிக்காகவும் வெளியிடங்களுக்குச் செல்வதை தவிர்த்துக்கொண்டால் மட்டுமே இதன் பரவலைக் கட்டுப்படுத்த முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
