பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் இராணுவத்துக்கிடையிலான மோதல் 2 ஆவது வாரமாக தொடர்ந்துவரும் நிலையில் போர் நிறுத்தத்துக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை என இஸ்ரேல் இராணுவம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஜெருசலேம் நகரம் யாருக்கு சொந்தம் என்பதில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது.
இந்தச் சூழலில் ஜெருசலேம் விவகாரத்தில் பாலஸ்தீனத்தின் காசா நகரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேல் இராணுவத்துக்கும் இடையில் கடந்த 10 ஆம் திகதி மோதல் வெடித்தது.
அதேபோல் ஹமாஸ் போராளிகளின் ராக்கெட் தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். 300க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இரு தரப்புக்கும் இடையில் தொடரும் சண்டையால் அங்கு போர் பதற்றம் உருவாகியுள்ளது. இது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அப்பாவி மக்களின் உயிரிழப்பை தவிர்க்க இருதரப்பும் உடனடியாக மோதலை கைவிட வேண்டும் என சர்வதேச சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அமெரிக்கா எகிப்து உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா.வும் காசாவில் சண்டை நிறுத்தத்தை அமல்படுத்துவதற்கான முயற்சியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. ஆனால் சர்வதேச சமூகத்தின் இந்த முயற்சிகளை வீணடிக்கும் விதமாக இஸ்ரேல் இராணுவம் காஸா மீதான தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், காஸா நகர் மீதான ராணுவ நடவடிக்கை முழுவேகத்தில் தொடர்வதாகவும் இப்போதைக்கு சண்டை நிறுத்தத்துக்கு வாய்ப்பில்லை எனவும் இஸ்ரேல் இராணுவம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அதேபோல் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ மத்திய கிழக்கில் நிரந்தர அமைதி ஏற்படும் வரை காசா நகர் மீதான தாக்குதல் தொடரும் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், இஸ்ரேல் காசாவில் போர் குற்றங்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘காஸாவில் இஸ்ரேல் ஒழுங்கமைக்கப்பட்ட அரசு பயங்கரவாதம் மற்றும் போர்க்குற்றங்களை நடத்துகிறது. சர்வதேச நீதிமன்றங்களுக்கு முன்னால் இது போன்ற குற்றங்களைச் செய்பவர்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க பாலஸ்தீனியர்கள் தயங்க மாட்டார்கள்’’ எனக் கூறினார்.
