சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் சீன அரசாங்கத்தின் உதவித்திட்டத்தின் கீழ் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட கட்டிடமொன்றின் நினைவு பலகையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமையானது, அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மொழி உரிமை புறக்கணிக்கப்பட்டமை என சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணியான திஸ்யா வேறகொட தெரிவித்துள்ளதாக பிரபல ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் கடந்த 19ம் திகதி சீன அரசாங்கத்தின் உதவித்திட்டத்தின் கீழ் இலத்திரனியல் நூலகமொன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த கட்டிடத்தின் நினைவு பலகையில் சிங்களம், ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளே காணப்படுகின்ற நிலையில், தமிழ் மொழி முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த குற்றச்சாட்டு தொடர்பில் சீன தூதரகம் பதிலளித்துள்ளது.
சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் உள்ளக இலத்திரனியல் நூலகம் அதுவென சீன தூதரகம் குறிப்பிடுகின்றது.
இந்த நூலகத்திற்கான நிதியை சீன மக்களும், சீன அரசாங்கமுமே வழங்கியுள்ளதாகவும் சீன தூதரகம் தெரிவிக்கின்றது.
சீன மொழியானது, சீனாவை நோக்கிய ஒரு சைகையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது மிகவும் பாராட்டப்பட்டது எனவும் சீன தூதரகம் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.


