வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் கொவிட் தொற்றாளர்களில், ஒக்சிஜன் பயன்படுத்த வேண்டிய நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த 5 தினங்களில் மாத்திரம் 120 சதவீதத்தால் ஒக்சிஜன் வழங்கும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கொவிட் இணைப்பு மத்திய நிலையத்தின் தரவுகளுக்கு அமைய இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 27ம் திகதி வைத்தியசாலைகளில் ஒக்சிஜன் வழங்கப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 149ஆக காணப்பட்ட நிலையில், அது அடுத்தடுத்த தினங்களில் படிப்படியாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதன்படி, கடந்த 28ம் திகதி 230 நோயாளர்களுக்கும், 29ம் திகதி 237 நோயாளர்களுக்கும், 30ம் திகதி 310 நோயாளர்களுக்கும், 31ம் திகதி 330 நோயாளர்களுக்கும் ஒக்சிஜன் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறுகின்றது.
