கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கர்ப்பிணி தாய் ஒருவரின் வயிற்றுக்குள் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட 37 வாரங்கள் நிரம்பிய சிசுவொன்றுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
கராபிட்டி போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி சமாதி தன்தெனியஆராய்ச்சி தெரிவிக்கின்றார்.
உயிரிழந்த சிசுவிற்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் ஊடாக, சிசுவிற்கு கொவிட் வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.
காலி − தடல்ல பகுதியைச் சேர்ந்த 31 வயதான பெண் ஒருவருக்கே, கொவிட் தொற்றுக்குள்ளான சிசு உயிரிழந்த நிலையில் பிறந்துள்ளது.
கொவிட் தொற்று காரணமாக குறித்த பெண், ஏற்கனவே கரந்தெனிய கொவிட் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று, குணமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, குழந்தை பிரசவத்திற்காக, குறித்த பெண், மஹமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே, குறித்த சிசு, வயிற்றுக்குள்ளேயே உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.
உயிரிழந்த சிசுவின் சடலம் மீதான பிரேத பரிசோதனை கராபிட்டி போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போதே, வயிற்றுக்குள் இருந்து உயிரிழந்த நிலையில் எடுக்கப்பட்ட சிசுவிற்கு கொவிட் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த சிசுவின் உடல் பாகங்கள், கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவிக்கின்றார்.
கொவிட் தொற்றினால் ஏற்பட்ட நியூமோனியா காரணமாகவா இந்த சிசு உயிரிழந்தது என்பது குறித்து ஆய்வுகளை நடத்துவதற்காகவே, சிசுவின் உடல் பாகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
