இணையத்தின் ஊடாக விற்பனை செய்யப்பட்ட சிறுமி ஒருவரை விலைக்கு வாங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இருவர் இன்று (15) இடம்பெற்ற அடையாள அணிவகுப்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனியார் கப்பல் ஒன்றின் கெப்டன் மற்றும் துணை கெப்டன் ஆகியோரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்று கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்கிரம முன்னிலையில் இந்த அடையாள அணி வகுப்பு இடம்பெற்றிருந்தது.
இதன்போது, பாதிக்கப்பட்ட சிறுமியினால் குறித்த இரண்டு சந்தேகநபர்களும் இலகுவாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக நீதவான் திறந்த நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து சந்தேகநபர்கள் மீதான விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளதால் அவர்களை பிணையில் விடுவிக்குமாறு பிரதிவாதிகளின் சட்டத்தரணி நீதிமன்றில் கோரியிருந்தார்.
அதன்படி, சந்தேகநபர்களை தலா 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ரொக்க பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை கொழும்பு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிட்டார்.
சாட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் எனவும் அழுத்தம் கொடுக்கப்படுவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றால் பிணை ரத்துச் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நிறைவடையும் வரை விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என நீதவான் இதன்போது சந்தேகநபர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வழக்கு எதிர்வரும் மாதம் 19 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
