மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் கொரோனா தொற்றால் முதல் முதலாக வவுணதீவில் 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், 43 பேருக்கு டெல்ட்டா வேரியன் வைரஸ்சும் 4 பேருக்கு அல்பா வைரஸ்சும் கண்டறிப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தில் 88 வீதமானவர்களுக்கு டெல்ட்டா வேரியன் இருக்ககூடிய சாத்தியக்கூறு இருப்பதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
மட்க்களப்பு சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனையில் இன்று வியாழக்கிழமை (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த 24 மணித்தியாலயத்தில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், வவுணதீவு சுகாதார அதிகாரி பிரிவில் 10 வயது சிறுவன் ஒருவர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது
இதேவேளை, புதிதாக 193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் கடந்தவாரம் 1,357 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் கடந்த வாரத்தில் மாத்திரம் 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு ஜயவர்த்தன பல்கலைக்கழகத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 49 மாதிரிகள் அனுப்பிவைக்கப்பட்டது. அதில் 43 பேருக்கு டெல்ட்டா வேரியன் வைரஸசும், 4 பேருக்கு அல்பா வைரஸ் தொற்றும் கண்டறியப்பட்டுள்ளதாக நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 88 வீதமானவர்களுக்கு டெல்ட்டா வேரியன் வைரஸ் இருக்க கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றது. எனவே பொதுமக்க ஊரடங்கு சட்டத்தை மீறி தேவையற்ற விதத்தில் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் சுகாதாரதுறையினரின் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி அவதானமாக செயற்படுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
