(நா.தனுஜா)
இலங்கையில் வெகுவாக அதிகரித்துவரும் வெறுப்புணர்வுப் பேச்சுகள், வன்முறைச் சம்பவங்கள் மற்றும் சிறுபான்மையின முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆஜராவதையும் கருத்துக்களை வெளிப்படுத்துவதையும் நிறுத்துவதற்காக அவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கக் கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் பாதுகாவலர்கள் தொடர்பான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் மேரி லோலரினால் இலங்கை அரசாங்கத்துக்கு எழுதப்பட்டிருக்கும் கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைதுசெய்யப்பட்டு தொடர்ச்சியாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மேலும் 7 மனித உரிமைகள்சார் நிபுணர்களுடன் இணைந்து ஏற்கனவே கடந்த ஜுலை மாதம் 8 ஆம் திகதி கடிதமொன்றை எழுதியிருந்தேன்.
இலங்கையின் சிறுபான்மையின முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவரான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா பிரபல சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமாவார். அவர் வெறுப்புணர்வுப்பேச்சுக்களுக்கு எதிரான வலுவான செயற்பாட்டாளராக இயங்கியதுடன் சிறுபான்மையின முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான வன்முறைகள் மற்றும் அடக்குமுறைச் சம்பவங்கள் உள்ளடங்கலாக முக்கிய பல வழக்குகளில் ஆஜராகியிருந்தார்.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 22 ஆம் திகதி கடிதமொன்றை அனுப்பியிருந்ததுடன் அதில் அவர் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் அவர் சட்ட உதவியை நாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றமை தொடர்பிலும் விசனத்தை வெளிப்படுத்தியிருந்தோம். இருப்பினும் அதற்கு அரசாங்கம் பதிலளிக்கவில்லை.
அவருக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் மற்றும் விசாரணைகள் என்பன அடிக்கடி மாற்றப்படுகின்றமையும் அவருக்கெதிராகப் பொய்யான வாக்குமூலங்களை வழங்குமாறு சில சாட்சியங்கள் நிர்பந்திக்கப்பட்டுள்ளமையும் இந்த சந்தேகம் வலுப்பெறுவதற்கான முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
