(இராஜதுரை ஹஷான்)
இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பை தொடர்ந்து எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களிடமும் உயர்ஸ்தானிகர்களிடமும் குறிப்பிட்டார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவுக்கும் இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களுக்கும் உயர்ஸ்தானிகர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (30) இரவு கொழும்பில் இடம்பெற்றது.வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ .எல் பீரிஸின் அழைப்புக்கமைய இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தவும், நாட்டு மக்களை பாதுகாக்கவும் அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளை தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் பாராட்டினார்கள்.
இலங்கைக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு நல்லுறவை பலப்படுத்தல், அவற்றை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் ஊடாக இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்து தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் இச்சந்திப்பின்போது யோசனைகளை முன்வைத்தார்கள்.