வர்த்தக அமைச்சினால், சுத்தமான குடிநீர் போத்தல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த குடிநீர் போத்தல் அறிமுகம் செய்யும் நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன.
”இந்த நாட்டிலுள்ள மிகப் பெரிய விற்பனையாளரான லங்கா சதொச ஊடாக குடிநீர் போத்தல் ஒன்றை 35 ரூபாவிற்கு விற்பனை செய்யவுள்ளோம். இந்த குடிநீரை பயன்படுத்தி விட்டு, வெற்று பிளாஸ்டிக் போத்தலை மீள வழங்கினால், 10 ரூபாவை செலுத்த எதிர்பார்த்துள்ளோம்” என அவர் கூறினார்.
நாட்டிலேயே மிக குறைவான விலையில் குடிநீர் போத்தலை லங்கா சதொச நிறுவனத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.
அத்துடன், இந்த திட்டத்தின் ஊடாக சூழலுக்கு பிளாஸ்டிக்கினால் ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த திட்டத்தின் ஊடாக ஏனைய குடிநீர் போத்தல் நிறுவனங்களுக்கு தாம் சவால் விடுக்கவில்லை என கூறிய வர்த்தக அமைச்சர், அந்த நிறுவனங்களும் பயன்படுத்திய போத்தலை மீளப் பெற்றுக்கொள்ளும் திட்டமொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.