கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் மீள் திருத்த பெறுபேறுகளில் மாற்றம் ஏற்பட்ட சம்பவமொன்று கண்டியில் பதிவாகியுள்ளது.
முன்னதாக வெளியிடப்பட்ட பெறுபேறுகளின் பிரகாரம், C சித்தியை பெற்ற மாணவன், மீள் திருத்த பெறுபேறுகளின் பிரகாரம் A சித்தியை பெற்றுக்கொண்டுள்ளார்.
கண்டி தர்மராஜ கல்லூரியில் கல்வி பயின்ற, ருவித்ர நிஷங்க அபேவர்தன என்ற மாணவனின் கணித பாட பெறுபேறுகளிலேயே இவ்வாறு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கணித பாடத்தில் C சித்தியை பெற்ற மாணவன், ஏனைய இரண்டு பாடங்களிலும் A சித்தியை பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்த பெறுபேறுகளின் பிரகாரம், குறித்த மாணவனின் இசெட் புள்ளி 2.0084 ஆக காணப்பட்டதுடன், மாவட்ட ரீதியில் இந்த மாணவன் 68 ஆவது இடத்திலும், இலங்கையில் 966ஆவது இடத்திலும் இருந்துள்ளார்.
இந்த நிலையில், மீள் திருத்த பெறுபேறுகளின் அடிப்படையில், C சித்தி A சித்தியாக மாற்றமடைந்த நிலையில், அவரது இசெட் புள்ளி 2.5538ஆக மாற்றமடைந்துள்ளது.
இதன்படி, மாவட்ட ரீதியில் 12வது இடத்தையும், இலங்கையில் 124வது இடத்தையும் அவர் தற்போது பெற்றுக்கொண்டுள்ளார்.
மீள் திருத்தத்திற்காக 48,000 விண்ணப்பங்கள் கிடைத்திருந்த நிலையில், அவர்களில் 329 பேரின் பெறுபேறுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவிக்கின்றார்.
NEWS SOURCES :- ADA DERANA