முக்சக்கர வண்டி சாரதி ஒருவர் மட்டக்களப்பு பார் வீதியில் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு நகர் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கருவேப்பங்கேணியைச் சேர்ந்த இரண்டு (02) பிள்ளைகளின் தந்தையான 48 வயதான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மட்டக்களப்பு ரயில் நிலைய ஆட்டோ தரிப்பிடத்திலிருந்து பயணிகளை ஏற்றி வருபவர் என தெரிவிக்கப்படுகிறது.
தனது வீட்டிலிருந்து இன்று அதிகாலை 4 மணிக்கு ரயிலில் வரும் பயணிகளை ஏற்றுவதற்காகச் சென்று பயணி ஒருவரை ஏற்றிச் சென்றுள்ளதாகவும் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.
குறித்த நபரின் ஆட்டோ வீதி ஓரத்தில் சேதமடைந்த நிலையில் காணப்பட்ட நிலையில் அதன் அருகில் சாரதியின் சடலம் காணப்பட்டதாகவும் தெரியவருகிறது. மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.