Our Feeds


Sunday, January 23, 2022

ShortNews

பாலியல் செயற்பாடுகளுக்கு விரும்புவதாக முதியவரை ஏமாற்றி கொள்ளை - கர்ப்பிணி யுவதியும், இளைஞனும் கைது



(எம்.எப்.எம்.பஸீர்)


பாலியல் செயற்பாடுகளுக்கு விரும்புவதாகவும்,  தான் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்வதாகவும்  கூறி வயோதிபர் ஒருவரை ஏமாற்றி  அழைத்து சென்று  அவரிடமிருந்த பணம்,  கையடக்கத் தொலைபேசி,  வங்கி அட்டை உள்ளிட்ட உடமைகளை கொள்ளையிட்டதாக கூறப்படும்  கர்ப்பிணியான யுவதி ஒருவரையும் இளைஞர் ஒருவரையும்  களனி - பிலபிட்டிய பகுதியில் வைத்து பேலியகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


குறித்த சந்தேக நபர்களைக் கைது செய்யும் போது அவர்களிடம் இருந்து  10 கிராம் 425 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளும் மீட்கப்பட்டதாக  பேலியகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

 அண்மையில் குறித்த சம்பவம் தொடர்பில் வயோதிபர் ஒருவர்  பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.  

தனது பாலியல் தேவையை பூர்த்தி செய்வதாக தன்னை ஏமாற்றி தனது உடமைகள் கொள்ளையிடப்பட்டதாக குறித்த முதியவர் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய  பேலியகொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர்  களுவித்தாரணவின் அலோசனைக்கு அமைய குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்  கசுன் சுபாஷ் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அந்த விசாரணைகளிலேயே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 பொலிசாரின் தகவலுக்கமைய,  கடந்த  17 ஆம் திகதி குறித்த முதியவரிடம் பாலியல் தேவையை பூர்த்தி செய்வதாக கர்ப்பிணியான 26 வயதான யுவதி விருப்பம் தெரிவித்து அவரின் சம்பதத்தை பெற்றுள்ளார். அதன் பின்னர் அந்த யுவதியை முதியவர் பேலியகொடை பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு அழைத்து செல்ல முற்பட்ட வேளை, தன்னால்  வெகு தூரம் வர முடியாது எனவும் கணவருக்கு  தெரியாமலேயே தான் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகவும் கூறி தனக்கு தெரிந்த கிட்டிய தூரத்தில் உள்ள ஓர் இடத்துக்கு செல்லலாம் என  அந்த யுவதி முதியவரை அழைத்து சென்றுள்ளார்.

 அதன்படி பேலியகொடை -  மேவெல்ல  பகுதியில் ஆற்றினை அன்மித்த பகுதியொன்றுக்கு முதியவரை அப்பெண் அழைத்து சென்றுள்ளார்.  அதன்போது அங்கு வந்துள்ள இளைஞன் தனது மனைவியுடன்  பாலியல் தொடர்பினை கொண்டிருப்பதாக முதியவரை தாக்கி, அவரின் உடமைகளையும் கொள்ளையிட்டு யுவதியுடன் அங்கிருந்து சென்றுள்ளார்.

 இவ்வாறு முதியவரை தாக்கிய இளைஞன், குறித்த யுவதியின் கள்ளக் காதலன் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 இந் நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும்,  யுவதி எகலியகொட பகுதியையும், இளைஞன் பேலியகொடை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிசார் கூறினர்.

 மேலதிக விசாரணைகளில்,  இவ்விருவரும் இதனை ஒத்த குற்றச் செயல்களில் இதற்கு முன்னர் ஈடுபட்டுள்ளமையும், அவ்வாறான 10 சம்பவங்கள் தொடர்பில் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் கூறினர்.  இருவருமே விளக்கமறியலிலும் இருந்துள்ளதாக கூறும் பொலிசார், இருவரில் இளைஞனுக்கு எதிராக  7 திறந்த பிடியாணைகளும் யுவதிக்கு எதிராக 5 திறந்த பிடியாணைகளும்  புதுக்கடை மற்றும் மஹர நீதிமனறங்கள் ஊடாக பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும்   கூறினர்.

 இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை பேளியகொடை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »