வவுனியாவில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த 8 பேரும் பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கிளைமோர் குண்டை வைத்திருந்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 3 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இதில் 9 ஆவது சந்தேகநபர் கைது செய்யப்படாத நிலையில் அவருக்கு எதிராக பகிரங்க பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
சந்தேகநபர்களை விடுவிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதனிடையே, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆலோசனை சபையினால் இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு பாதுகாப்பு அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, சந்தேகநபர்களை பிணையில் விடுவிப்பதற்கான இணக்கப்பாட்டு கடிதம், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வவுனியா நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டிருந்தாக சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி செல்வநாயகம் கேதீஷ்வரன் தெரிவித்தார்.
குறித்த கடிதத்தை கருத்திற்கொண்ட வவுனியா பதில் நீதவான் க.தயாபரன், சந்தேகநபர்கள் பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
