காலி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய ஏழு உறுப்பினர்களை நீக்குவதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம் ஐந்து பிரதேச சபைகளைச் சேர்ந்த ஏழு உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவினால் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
இமதுவ பிரதேச சபையில் இருவரும் ஹபராதுவ, கரந்தெனிய பத்தேகம, யக்கலமுல்ல, பெந்தோட்டை ஆகிய பிரதேச சபைகளில் தலா ஒவ்வொருவரும் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து காலி மாவட்ட தேர்தல்கள் தெரிவத்தாட்சி அதிகாரி டபிள்யூ. எச். ஆர். விஜேகுமாரவுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்.
கடந்த தேர்தலின்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக செயற்படாமல் ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு இவர்கள் உழைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஒழுக்காற்றுக் குழுவின் விசாரணைகளின் பின்னர் இவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.