(பாறுக் ஷிஹான், ஹுதா உமர்)
கல்வி அமைச்சின் எழுத்து மூலக் கட்டளைக்கிணங்க, சென்ற பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் மகளிர் கல்லூரிக்கு கடமையேற்பதற்காக சென்றிருந்த பஹ்மிதா றமீஸ் என்ற ஆசிரியையை கடமையேற்க விடாது குழப்பங்களை ஏற்படுத்தி, கழுத்து நெரிக்கப்பட்டதாகத் தெரிவித்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து தனது சட்டரீதியான கடமையை செய்யத் தடுத்தமை என்ற குற்றச்சாட்டின் பேரில் திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் மகளிர் கல்லூரி அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் சென்ற மார்ச் மாதம் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். குறிப்பிட்ட வழக்கில் ஆசிரியை பஹ்மிதாவுக்கு ஆதரவாக குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகளான் றதீப் அஹமட், ஹஸன் றுஷ்தி, முஹைமின் காலித் மற்றும் ஸாதிர் அஹமட் ஆகியோர் ஆஜராகி சமர்ப்பணம் செய்திருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக வழக்கு திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் இம்மாதம் எடுத்துக் கொள்ளப்பட்டபோது சட்டத்தரணிகளான முபஸ்லீன் மற்றும் றிஸ்வான் ஆகியோர் வாதிதரப்பில் ஆஜராகி இருந்தனர். ஏலவே மன்றின் நீதிவான் குரல்கள் இயக்க சட்டத்தரணிகளின் சமர்ப்பணத்தை ஏற்று பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை அனுப்ப கட்டளை பிறப்பித்துள்ளார். இவ்வழக்கானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.