மட்டக்களப்பு, காத்தான்குடியில் அரசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல சரக்கு விற்பனை நிலையம் ஒன்றின் களஞ்சியசாலையை இன்று(10) வெள்ளிக்கிழமை காலை சுற்றிவளைத்த நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை அரிசி மூடைகளை கைப்பற்றி அரசின் கட்டுப்பாட்டு விலைக்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் மட்டக்களப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரனின் வழ்காட்டலிலும் ஆலோசனையின் பேரிலும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் அன்வர் சதாத் தலைமையில் அங்கு சென்று அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல சரக்கு விற்பனை நிலையத்தின் களஞ்சியசாலையை முற்றுகையிட்டனர்.
அங்கிருந்த அரிசி மூட்டைகளை மீட்டு அவ்விடத்திலேயே அவை அனைத்தையும் அரசின் கட்டுக்காட்டு விலைக்கு பொது மக்களுக்கு விற்பனை செய்யுமாறு உத்தரவையிட்டதையடுத்து குறித்த அரிசியை வைத்திருந்த கடை உரிமையாளர் பொது மக்களுக்கு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு அரிசியை விற்பனை செய்தார்.
குறித்த பல சரக்கு விற்பனை நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் மட்டக்களப்பு அலுவலக அதிகாரிகளினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.