(பாறுக் ஷிஹான்)
தமிழர்கள் போன்றே முஸ்லிம் மக்களும் முன்னேற கூடாது என இராணுவத்தை இந்த அரசாங்கம் வடக்கு, கிழக்கில் குவித்துள்ளது.
இலங்கை இராணுவத்தின் கட்டமைப்பில் 20 டிவிசன்கள் இருக்குமாயின் அதில் 16 டிவிசன்கள் வடக்கு, கிழக்கில் காணப்படுகின்றன.
தற்போதைய சூழ்நிலையிலும் கூட ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இராணுவத்தினருக்கான எந்தவொரு வளமும் குறைக்கப்பட மாட்டா என கூறியுள்ளார். இது இனவாதத்தின் ஒரு விளைவாகும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு காந்திஜீ விளையாட்டு கழகத்தின் 25 ஆவது ஆண்டை முன்னிட்டு இன்று (12) இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் பேசுகையில், இந்த நாட்டில் பொருளாதார வீழ்ச்சியை அரசாங்கம் அனுபவித்து கொண்டிருக்கிறது. இந்த அரச கட்டமைப்புக்குள் உள்ள மக்கள் எவ்வாறு சிரமங்களை எதிர்கொள்வார்கள் என்பதை நாம் அவதானிக்கலாம்.
கடந்த 30 வருடங்களாக இலங்கை அரசாங்கம் தமிழர்களின் பொருளாதாரத்தை திட்டமிட்டு போரால் அழித்தது. பின்னர் போர் நிறைவுற்ற 13 வருடங்களின் பின்னரும் தமிழருக்கு இந்த நிலை தொடர்ந்தது.
இலங்கை அரசாங்கம் தமிழர்களை அழிப்பதற்காகவே பாதுகாப்புக்கு இவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கிறது. தமிழர்கள் போன்றே முஸ்லிம்கள் முன்னேற கூடாது என இராணுவத்தை வட கிழக்கில் குவித்துள்ளனர் என்றார்