(நா.தனுஜா)
அரிசி ஆலை உரிமையாளர்கள் இணைந்து அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்ய முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டிய பிரபல அரிசி ஆலை உரிமையாளரும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரருமான டட்லி சிறிசேன, அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்று கூறி ஊடகவியலாளர் சந்திப்பின் இடைநடுவில் கோபத்துடன் வெளியேறினார்.
நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் படிப்படியாக அதிகரித்து வருகின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில் இன்று (22) புதன்கிழமை அரிசி ஆலை உரிமையாளர்கள் இணைந்து கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் மற்றுமொரு அரிசி ஆலை உரிமையாளர் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வது குறித்து பிரஸ்தாபித்தபோது அதற்கு எதிர்ப்பை வெளிக்காட்டிய டட்லி சிறிசேன, கடும் கோபத்தையும் வெளிப்படுத்தினார். அது மாத்திரமன்றி இவ்விடயத்தில் உண்மையான தகவல்களை வெளியிடுமாறும் அவர் வலியுறுத்தினார்.