(எம்.வை.எம்.சியாம்)
கொழும்பு- தெமட்டகொட பகுதியில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருள் உட்பட தங்க நகைகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (21) குறித்த பெண் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக தெமட்டகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 57 வயதுடைய ஒருவராவார்.
சந்தேக நபரிடமிருந்து 21 கிராம் 470 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 26 கிராம் 910 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், இலத்திரனியல் தராசு, 6 தங்க மாலைகள், 25 தங்க வளையல்கள், 6 கையடயக்கத் தொலைபேசிகள் மற்றும் 2 மடிக்கணினிகள் என்பனவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.