Our Feeds


Thursday, November 24, 2022

ShortTalk

அல்குர்ஆன் & இஸ்லாமிய புத்தகங்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவை - வேறு மத புத்தகங்களுக்கு தேவையில்லை - முஸ்லிம்களுக்கு பாகுபாடு.



றிப்தி அலி


சமயப் புத்தகங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்யும் போது புனித அல்குர்ஆன் மற்றும் இஸ்லாமிய சமயப் புத்தகங்களுக்கு மாத்திரம் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டும் எனப் பாகுபாடு காட்டப்படுகின்ற விடயம் தகவலறியும் விண்ணப்பத்தின் ஊடாக வெளியாகியுள்ளது.


ஏனைய சமய நூல்களுக்கு இவ்வாறானதொரு அனுமதி பெறப்பட வேண்டிய அவசியமில்லை என்பதும் தெரியவந்துள்ளது. ஈஸ்டர் தற்கொலை தாக்குதலினை அடுத்தே இந்தப் பாகுபாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சமூக செயற்பட்டாளரான முஹம்மத் ஹிசாம், புத்தசாசன,  மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றுக்கு சமர்ப்பித்த தகவலறியும் விண்ணப்பங்களின் ஊடாகவே இந்த விடயம் தெரியவந்தது.

பேருவளையில் இயங்கிவரும் நபவியா இஸ்லாமிய இளைஞர் அமைப்புக்கு கட்டார் நாட்டிலிருந்து ஒரு தொகுதி புத்தகங்கள் கடந்த 2020ஆம் ஆண்டில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தகங்களை சுங்க பிரிவிலிருந்து விடுவிப்பதற்கான அனுமதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2020.06.15ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்நூல்களில் ஏனைய மதங்களை விமர்சிக்கவோ, கண்டிக்கவோ இல்லை எனவும் திணைக்களத்தினால் குறித்த கடித்தில் தெரிவிக்கப்படடுள்ளது. இக்கடிதம் கண்காணிப்பிற்காக சுங்கத் திணைக்களத்தினால் பாதுகாப்பு அமைச்சிற்கு அனுப்பப்பட்டிருந்தது.

இதன்போது, குறித்த புத்தகங்களில் நான்கு புத்தகங்கள் சமய நல்லிணக்கத்துக்கு சவால்களை ஏற்படுத்தும் சலபி மற்றும் வஹாபி இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைகளை உள்ளடக்கியுள்ளதாக 2020.07.21ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்தனவினால் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்; திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டது.

அத்துடன், குறித்த புத்தகங்களை இறக்குமதி செய்வதற்கான அங்கீகாரத்தினை வழங்கிய நபர்கள் தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சினால் கோரப்பட்டிருந்தது.

இதனையடுத்து, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து இஸ்லாமிய சமய புத்தகங்களும் பாதுகாப்பு அமைச்சினால் பரிசீலனை செய்யப்பட்டு அனுமதி வழங்கினால் மாத்திரமே இலங்கை சுங்க திணைக்களத்திலிருந்து விடுவிக்கப்படும் என்ற அறிவித்தல் 2021.03.05ஆம் திகதி வெளியிடப்பட்டது.  

இதனால், இஸ்லாமிய சமய புத்தகங்கள் மற்றும் புனித அல்குர்ஆன் ஆகியவற்றினை நாட்டுக்குள் இறக்குமதி செய்வதற்கு தேவையான சிபாரிசுகளை வழங்குவதற்காக ஒன்பது பேரைக் கொண்ட "புத்தக விமர்சன மற்றும் வெளியீட்டுக் குழு" முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2021.04.19ஆம் திகதி நியமிக்கப்பட்டது.

திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் அன்வர் அலி,  அஷ்ஷெய்க் கலாநிதி ஏ.எம். அப்வர்தீன், அஷ்ஷெய்க் கலாநிதி அஸ்வர் அஸாஹீம், அஷ்ஷெய்க் அர்கம் நூராமித், அஷ்ஷெய்க் ஸகி அஹமட், அஷ்ஷெய்க் முப்தி முஸ்தபா ராசா ஸபர், அஷ்ஷெய்க் ஏ.எச். இஹ்ஸானுத்தீன், அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். ஸில்மி மற்றும் அஷ்ஷெய்க் முர்ஸித் முழப்பர் ஆகியோரே இக்குழுவின் உறுப்பினர்களாவார்.

இதற்கு மேலதிகமாக இஸ்லாமிய சமய புத்தகங்கள் மற்றும் புனித அல்குர்ஆன் ஆகியவற்றினை நாட்டுக்குள் இறக்குமதி செய்வதற்கு எட்டு அம்சங்களைக் கொண்ட வழிகாட்டியொன்றும் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது.

திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வழிகாட்டி, புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் சுங்கத் திணைக்களம் ஆகியவற்றுடன் கலந்தாலோசித்த பின்னரே அறிமுகப்படுத்தப்பட்டது என திணைக்களம் கூறுகின்றது.

புத்தகங்கள் இறக்குமதி செய்வதற்கான இந்த அறிஞர்கள் குழுவின்  சிபாரிசு  புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடாக பாதுகாப்பு அமைச்சிற்கு அனுப்பிவைக்கப்படும். பின்னர், பாதுகாப்பு அமைச்சின் ஊடாக சுங்கத் திணைக்களத்திற்கு இறக்குமதி செய்வதற்கான அனுமதி அனுப்பிவைக்கப்படும்.

எவ்வாறாயினும், இந்த அறிஞ்சர்கள் குழு நியமிக்கப்பட்டதன் பின்னர் சிபாரிசு செய்யப்பட்ட எந்தவொரு நூல்களும் இறக்குமதிக்கு அரசாங்கத்தினால் தடை விதிக்கப்படவில்லை எனவும் திணைக்களம் குறிப்பிட்டது.

எனினும் பௌத்த, இந்து மற்றும் கிறிஸ்;தவம் ஆகிய சயமங்களில் சமயப் புத்தங்களை நாட்டுக்குள் இறக்குமதி செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்காகும்.

அது மாத்திரமல்லாமல் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட  வழிகாட்டல் போன்ற எதுவும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

எவ்வாறாயினும் கிறிஸ்தவ சமய நூல்கள் இறக்குமதியின் போது தேவையேற்படின் தேசிய திருவழிபாடு கலாசார ஆணைக்குழு மற்றும் தேசிய கிறிஸ்தவ சபை ஆகியவற்றின் ஆலோசனைகள் பெறுவது வழமை என கிறிஸ்தவ சமய விவகார திணைக்களம் தெரிவித்தது.

புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சிற்கு சமர்ப்பிக்கப்பட்ட  தகவலறியும் விண்ணப்பத்தின் ஊடாகவே இந்த விடயம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் புத்தசாசன,  மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சிற்கு 2022.06.02ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட தகவலறியும் விண்ணப்பத்திற்கு 2022.07.06ஆம் திகதி தகவல் வழங்கப்பட்டது.

எனினும், இந்த அமைச்சின் கீழுள்ள முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தகவல் அதிகாரி மற்றும் குறித்தளிக்கப்பட்ட அதிகாரியோருக்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவலறியும் கோரிக்கைக்கும், மேன் முறையீட்டுக்கும் எந்தவித பதிலும் கிடைக்கப் பெறவில்லை.

இதற்கு எதிராக 2022.07.25ஆம் திகதி தகவலறியும் ஆணைக்குழுவிடம் மேற்கொள்ளப்பட்ட மேன் முறையீட்டின் விசாரணை கடந்த நவம்பர் 17ஆம் திகதி இடம்பெற்றது.

ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேயவர்த்தன, ஆணையாளர்களான கிஷாலி பிண்டோ ஜயவர்த்தன, ஜகத் லியனாராச்சி மற்றும் ஏ.எம். நஹ்யா ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்ற இந்த விசாரணையின் போது சமூக செயற்பட்டாளரான முஹம்மத் ஹிசாமினால் கோரப்பட்ட தகவல்கள் அனைத்தும் திணைக்கள பணிப்பாளர் இப்றாஹீம் அன்சாரினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »