Our Feeds


Friday, April 21, 2023

News Editor

1,320 புதிய வைத்தியர்கள் நியமனம்


 நாட்டில் 1,320 வைத்தியர்களுக்கு எதிர்வரும் 25 ஆம் திகதியில் இருந்து புதிதாக நியமனம் வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.


அதற்கிணங்க இந்த வைத்தியர்கள் அன்றிலிருந்து நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளுக்கு இணைத்துக் கொள்ளப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவ்வைத்தியர்கள் பிரதானமாக பின்தங்கிய பிரதேச வைத்தியசாலைகளில் பணிபுரிவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தற்போது நாட்டில் அனைத்து வைத்தியர்களின் எண்ணிக்கை 19,000 ஆகக் காணப்படுவதுடன், புதிய வைத்தியர்களின் நியமனத்துடன் அவர்கள் 20,000 ஆக அதிகரிக்கப்படவுள்ளனர்.


கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டதுடன், அதிக எண்ணிக்கையான வைத்தியர்கள் ஒரே தடவையில் நியமனம் பெறுவதற்கு முடிந்தமை இந்நாட்டின் சுதந்திர சுகாதார சேவைக்குக் கிடைத்த வெற்றி என சுகாதார அமைச்சர் பேராசிரியர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.


அத்துடன் தற்போது வருடாந்தம் மருத்துவக் கல்லூரிக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 1,500 இலிருந்து 1,800 வரையாகும். அதனை 5,000 வரை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.


இதற்கமைய அதனை இலக்காகக் கொண்டு நாட்டின் சுகாதாரத் துறையை எதிர்காலத்தில் மேலும் முன்னேற்றுவதற்கு உத்தேசித்துள்ளதாக சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


எதிர்வரும் 25 ஆம் திகதியில் இருந்து நாடு பூராகவும் காணப்படும் வைத்தியசாலைகளில் இணைக்கப்படும் புதிய வைத்தியர்கள், வைத்தியப் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த வைத்தியர்கள் மாத்திரமே வைத்தியர்களாக நாட்டின் சுகாதாரத் துறையில் இணைத்துக் கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »