பொரளை - குறுக்கு வீதியில் அமைந்துள்ள நாட்டின் முன்னணி பாதணி நிறுவனம் ஒன்றின் நிறைவேற்று பணிப்பாளரின் வீட்டின் மீது ரீ - 56 ரக துப்பாக்கி கொண்டு துப்பாக்கிப் பிரயோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு இடம்பெறும் போது, குறித்த நபர் வீட்டிலேயே இருந்துள்ளதுடன், துப்பாக்கிப் பிரயோகத்தால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.
துப்பாக்கிச் சூட்டினால், வீட்டின் பிரதான நுழைவாயில் கதவுக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
துப்பாக்கிப் பிரயோகத்துக்கான காரணம் இதுவரை வெளிப்படுத்தப்படாத நிலையில், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரும், பொரளை பொலிசாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
