Our Feeds


Tuesday, October 24, 2023

SHAHNI RAMEES

விரும்பியோ அல்லது விரும்பாமலோ அடுத்த வருடம் தேர்தலை நடத்தியே ஆக வேண்டும் - முஜிபுர் ரஹ்மான்

 



(எம்.வை.எம்.சியாம்)


அரசியலமைப்பு ஏற்ப அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல்

இடம்பெற வேண்டும். அதன் பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். 


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரும்பியோ அல்லது விரும்பாமலோ தேர்தலை நடத்தியே ஆக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பிரதி பொதுச் செயலாளருமான முஜுபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.


அத்துடன் எதிர்க்கட்சி இடம்பெறவுள்ள எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தயார் எனவும் எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படும் தீர்மானங்கள் இல்லை எனவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெவ்வேறு காரணங்களை கூறி தேர்தல்களை பிற்போட்டு வருகிறார்.எவ்வாறாயினும் அரசியலமைப்புக்கேற்ப அடுத்த வருடம் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.


இந்த விடயம் நாட்டு மக்கள் அனைவரும் நன்கறிந்தது. அதன் பின்னர் பாராளுமன்ற தேர்தலும் நடத்தப்பட வேண்டும். எவ்வாறாயினும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் ஏற்கனவே இடம்பெற்றிருக்க வேண்டும்.


இருப்பினும் இது தொடர்பில் தெளிவான அறிவித்தல்கள் விடுக்கப்படவில்லை. 2025 ஆம் ஆண்டு முதல் பகுதியில் நடத்துவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


இந்த தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் தோல்வியடைய வேண்டி ஏற்படும் என கருதி அவர் தேர்தலை  நடத்த போதுமான பணம் இல்லை என கூறியுள்ளார்.எவ்வாறாயினும் ஜனாதிபதி விரும்பியோ அல்லது விரும்பாமலோ நிச்சயம் அடுத்த வருடம் தேர்தல் இடம்பெற சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்.


மேலும் நாட்டில் எந்தவொரு தேர்தலுக்கும் முகங்கொடுக்க எதிர்க்கட்சி தயாராகவே இருக்கிறது. நாம் ஒருபோதும் தேர்தலுக்கு பின்வாங்கவில்லை.


அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சி எந்தவொரு தேர்தலிலும் எமக்கு போட்டி கட்சியாக காணப்படாது. காரணம் கடந்த  பொதுத் தேர்தலில் அவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள். தற்போது அந்த கட்சியை ஜனாதிபதி மாத்திரமே  பிரதிநிதித்துவப்படுத்திக்கொண்டு இருக்கிறார். அந்த வகையில் இந்த கட்சி எமக்கு போட்டியாக இருக்கும் என நாம் நினைக்கவில்லை.


முன்னர் காணப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி இன்றில்லை. அன்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றில்லை. அவர்களின் கொள்கைகள் கோட்பாடுகள் மாற்றமடைந்துள்ளன. அவர்கள் பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்துள்ளனர். ராஜபக்ஷக்களின் தீர்மானங்களையே அந்த கட்சி நடைமுறைப்படுத்திக் கொண்டு செல்கிறது. எதிர்காலத்தில் எதிர்க்கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பயணிக்க எந்தவொரு அபிப்பிராயங்களும் கிடையாது. பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி வைத்துள்ளவர்களோடு எங்களுக்கு எந்தவொரு டீலும் அவசியமில்லை என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »