Our Feeds


Friday, January 5, 2024

News Editor

ஆயுர்வேத தொழில்துறைகளை வரியிலிருந்து விலக்களிக்க தீர்மானம் - சிசிர ஜயகொடி


 சுகாதாரச் செலவைக் குறைக்கும் வகையில், ஆயுர்வேத உற்பத்திகள், மருந்துகள் மற்றும் சுதேச மருத்துவம் தொடர்பான தொழில்துறைகளுக்கு வற் வரியில் இருந்து விலக்களிக்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.


பாரம்பரிய வைத்தியர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் சுதேச வைத்திய முறையைப் பாதுகாப்பதற்கும் விசேட அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.



ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி இவ்வாறு தெரிவித்தார்.



சுதேச மருத்துவத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தின் தலைமைத்துவத்துடன் “பொடி மன்த்ர” உடல் மந்திரங்கள் என்ற பெயரில் ஆயுர்வேத ஆரோக்கிய மையங்களை சுதேச வைத்தியத்துறைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாகவும் சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி மேலும் தெரிவித்தார்.


இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி, 



“இதுவரை நாம் சுதேச மருத்துவத் துறையில் பல சிறந்த சாதனைகளைப் படைத்துள்ளோம். ஆயுர்வேத உற்பத்திகள், மருந்துகள் மற்றும் சுதேச மருத்துவம் தொடர்பான தொழில்துறைகளுக்கு வற் வரியில் இருந்து விலக்களிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் மூலம் சுகாதாரச் செலவுகளைக் குறைக்க முடிந்தது.



பாரம்பரிய மருத்துவத்தை பாதுகாக்க விஷேட பிரிவொன்றை நிறுவ அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. பாரம்பரிய மருத்துவத் முறைக்கு ஒரு முறையான நிறுவனம் ஸ்தாபிக்கப்படும் வரை பாரம்பரிய மருத்துவத்தைப் பாதிக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக சுதேச மருத்துவ அமைச்சின் கீழ் இந்த விஷேட பிரிவு நிறுவப்படவுள்ளது.



பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத சுதேச மருத்துவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கி, அந்த மருத்துவ முறை குறித்து ஆய்வுகள் நடத்தி, முறையான கட்டமைப்பைத் தயாரிப்பதுடன், அந்தத் தொழில்துறை தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும் பணிகள் இதன் கீழ் இடம்பெறும்.

 


அது குறித்து கலந்துரையாடிய பின்னர், திறைசேரிக்கு சுமை ஏற்படாத வகையில் பாரம்பரிய மருத்துவத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு பிரிவை நிறுவுவதற்கு அங்கீகாரம் அளிக்க அமைச்சரவைக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


மேலும், ஆயுர்வேத கூட்டுத்தாபனம் சுதேச மருத்துவத் துறையில் ஆயுர்வேத சிகிச்சை மையங்களான “பொடி மன்த்ர” (உடல் மந்திரம்) அறிமுகப்படுத்தவுள்ளது. இது சுதேச மருத்துவத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். ஆயுர்வேத சுகாதார நிலையங்கள் மூலம் பட்டதாரி, பயிற்சி பெற்ற மசாஜ் சிகிச்சையாளர்களின் மேற்பார்வையில் உடல் நலப் பாதுகாப்பு சேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.



இதனை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆரம்பிக்க 


திட்டமிட்டுள்ளோம். உள்நாட்டில் ஹோட்டல் மற்றும் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களையும் இதற்காக பதிவு செய்ய அழைக்கிறோம். இது தொடர்பான பத்திரிகை விளம்பரம் இம்மாதம் 10 ஆம் திகதி வெளியாகும்.


மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள், சுதேச மருந்துகளின் உற்பத்தி மற்றும் உள்நாட்டு மூலிகைச் செடிகளின் விளைச்சலை வணிக ரீதியிலான தொழிதுறையாக தரம் உயர்த்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.  இது வரை வாழ்வாதார அளவில் இருந்த இச்செயற்பாட்டை, இனிமேல் வணிக அளவில் மேற்கொள்ள தயாராக உள்ளோம் என்பதையும் குறிப்பிட வேண்டும்.



தென்பகுதியில் மழை காலநிலைக்கு ஏற்ப நெல் பயிரிடப்படுகிறது. இந்நிலையில் அந்த விளைச்சலை, ஒன்று அல்லது இரண்டு போகங்கள் மாத்திரமே அறுவடை செய்யலாம். ஆனால் நெல் பயிர்ச்செய்கைக்கு இணையாக திப்பிலியையும் பயிரிடலாம். இரண்டும் ஒரே தட்பவெப்பநிலை மற்றும் காலநிலை நிலைமைளுக்கு ஏற்ப இருந்தாலும் கூட திப்பிலியை நான்கு போகங்களுக்கு அறுவடை செய்யலாம்



ஒரு கிலோகிராம் நெல் 150 அல்லது 200 ரூபாவாகவும், திப்பிலி ஒரு கிலோகிராம் 9000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. எனவே, பாரம்பரிய பயிர்ச்செய்கை முறைகளுக்குப் பதிலாக வணிகப் பயிர்ச்செய்கையில் கவனம் செலுத்தத் தயாராக உள்ளோம் என்பதையும் குறிப்பிட வேண்டும். சுதேச மருத்தவத்திற்கு அவசியமான மூலப்பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதும் நமது மற்றொரு குறிக்கோளாகும்.



மேலும், "ஆரோக்கியமான குழந்தைகள் திட்டம்" மூலம் சுதேச மருத்துவத் துறையில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களின் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான மற்றும் மேம்பட்ட கல்வியை வழங்க நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஆயுர்வேத சபைகளை வலுப்படுத்துவதும் நமது மற்றொரு நோக்கமாகும். இன்னும் சில மாதங்களில் சுதேச மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் அத்துறையில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் "ஜனாதிபதி தங்க விருதுகள்" வழங்கும் நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன” என சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி மேலும் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »