Our Feeds


Monday, February 3, 2025

Sri Lanka

வெளிநாட்டினர் இந்த வருடம் 100 இலங்கை குழந்தைகளை மாத்திரமே தத்தெடுக்க முடியும் – சரோஜா போல்ராஜ்!


மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், 2025 ஆம் ஆண்டுக்கான குழந்தைகள் தத்தெடுப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுக்கான தத்தெடுப்பு உத்தரவுகளின் எண்ணிக்கையை 100 ஆகக் கட்டுப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சிறுவர்களைத் தத்தெடுக்கும் கட்டளைச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் ( 5ஆ) (1) ஆம் உட்பிரிவின் கீழ் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் இதனை வெளியிட்டுள்ளார்.

கட்டளைச் சட்டத்தின் 1ஆவது பிரிவின்படி, இந்த தத்தெடுப்பு உத்தரவுகள் இலங்கைப் பிரஜைகளாக இல்லாத, இலங்கையில் வசிக்காத நபர்களுக்குப் பொருந்தும்.

இந்த திட்டம் இலங்கையில் உள்ள குழந்தைகளை தத்தெடுக்க விரும்பும் வெளிநாட்டு நபர்களுக்கு பொருந்துகிறது.

இலங்கையில் வெளிநாட்டினரால் குழந்தைகளை தத்தெடுப்பது குழந்தைகள் தத்தெடுப்பு கட்டளைச் சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

குழந்தையின் நலன் மற்றும் இலங்கை சட்டங்களுடன் இணங்குவதை உறுதி செய்வதற்காக ஒரு நீண்ட கட்டமைக்கப்பட்ட சட்ட செயல்முறையை இது உள்ளடக்கியது.

இலங்கை குழந்தைகளை தத்தெடுக்க விரும்பும் வெளிநாட்டு விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை நன்னடத்தை மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கின்றனர்.

விண்ணப்பதாரர்கள் ஒவ்வொருவரும் 25 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், விண்ணப்பம் செய்யப்படும் குழந்தையை விட 21 வயதுக்குக் குறையாமல் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டிலும் அனுமதிக்கக்கூடிய அதிகபட்ச தத்தெடுப்புகளின் எண்ணிக்கை விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரால் வர்த்தமானியில் வெளியிடப்படும்.

மேலும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அத்தகைய உச்ச வரம்பு குறித்து அறிவிக்கப்படும்.

இந்தநிலையிலேயே இந்த ஆண்டுக்கான வர்த்தமானி அறிவிப்பும் அண்மையில் வெளியாகியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »