மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தால் (DMT) புதிய வாகன உரிமையாளர்களுக்கு வாகன இலக்கத் தகடுகளை வழங்குவதில் இரண்டு மாத கால தாமதம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்குவதற்காக மோட்டார் போக்குவரத்து புதிய விநியோகஸ்தரிடம் கொள்முதல் கோரிக்கையை சமர்ப்பித்துள்ளதால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, இந்த செயல்முறை இரண்டு மாதங்களுக்குள் முடிவடையும் என நம்பிக்கை தெரிவித்தார். அதன்பின்னர், இலக்கத் தகடுகள் வழங்கும் பணி மீண்டும் தொடங்கப்படும் என்றார்.
அதுவரை, போக்குவரத்து திணைக்களம் காகிதத்தில் அச்சிடப்பட்ட இலக்கத் தகடுகளையும், புதிய வாகன உரிமையாளர்களின் பதிவு விபரங்களை உறுதிப்படுத்தும் கடிதத்தையும் வழங்கி வருகிறது. இந்த நடவடிக்கை குறித்து பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ விநியோகஸ்தர், கோரிக்கைக் கடிதம் ஒன்றை அனுப்பிய பின்னர் தனது ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டதால், வாகன இலக்கத் தகடுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சிகள் மந்த கதியில் நடைபெறுவதாக கமல் அமரசிங்ஹ கூறினார். அண்மையில் அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழுவுடனான கூட்டம், தொடர்புடைய தரப்பினர் கலந்து கொள்ளாததால் தோல்வியடைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.