Our Feeds


Saturday, June 21, 2025

Sri Lanka

கருணை கொலைக்கு பிரித்தானிய பாராளுமன்றம் ஒப்புதல்!


குணப்படுத்த முடியாத கொடூர நோயால் பாதிக்கப்பட்டவா்கள் தங்களின் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு அனுமதி அளிப்பதற்கான சட்ட மசோதா பிரித்தானிய பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

பாராளுமன்ற கீழவையில் நடைபெற்ற இதற்கான வாக்கெடுப்பில், மசோதாவுக்கு ஆதரவாக 314 எம்.பி.க்களும் எதிராக 291 எம்.பி.க்களும் வாக்களித்தனா்.

இதற்குப் பிறகு அந்த மசோதா மேலவைக்குக் கொண்டு செல்லப்படும். அங்கு அந்த மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளவோ, சட்டமாக்கலை தாமதப்படுத்தவோ மட்டும்தான் முடியும். கீழவை நிறைவேற்றிய மசோதாக்களை மேலவையால் நிராகரிக்க முடியாது.

இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், பிரிட்டனின் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட, குணப்படுத்த முடியாத கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நபா்கள் மருத்துவா்களின் உதவியுடன் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள விண்ணப்பிக்க முடியும். அதற்கான மருந்தை தாங்களாகவே உட்கொள்ளும் திறன் நோயாளிகளுக்கு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »