நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமர்செட் பகுதியில் 8 இலட்சத்து 10ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்த சந்தேகநபரை எதிர்வரும் நவம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிவான் வெள்ளிக்கிழமை(24) உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை குறித்த வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்றிருந்த நிலையில், இந்தத் சம்பவம் இடம்பெற்றதாக நானுஓயா குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில், நானுஓயா தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி முதன்மை பொலிஸ் பரிசோதகர் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதற்கமைய, நுவரெலியா தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் நானுஒயா சமர்செட் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், விசாரணையின் பின்னர் அவரிடமிருந்து நகைகள், பணம் மற்றும் தன்னியக்க பணப்பரிமாற்ற அட்டை (ATM Card) என்பன கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திருடப்பட்ட தன்னியக்கப் பணப்பரி மாற்ற அட்டையைக் (ATM Card) கொண்டு 50 ஆயிரம் ரூபாவை எடுத்து பொருட்கள் கொள்வனவு செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நானுஓயா பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து மேற்கொண்ட விசாரணையின் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
