முல்லைத்தீவு, சாலைக் கடற்கரைப் பகுதியில் கடத்துவதற்குத் தயாராக இருந்த சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகளைக் கடற்படையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நேற்று (17) மீட்டுள்ளனர்.
முல்லைத்தீவு - சாலைக் கடற்கரை ஊடாகக் கஞ்சா கடத்தப்படவுள்ளதாகக் கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது 'மஹேந்திரா கெப்' ரக வாகனமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 140 கிலோ 460 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இதன்போது சந்தேக நபர் தப்பியோடியுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளும் வாகனமும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளின் பின்னர் இவை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
-முல்லைத்தீவு நிருபர் தவசீலன்-
