உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட தினம் அண்மிக்கும் போது ஏதாவதொன்றை செய்வதைப் போன்று, இம்முறை முன்னாள் புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஸ் சலே கைது செய்யப்பட்டிருக்கின்றார். இது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21ஆம் திகதியை இலக்கு வைத்து அரங்கேற்றப்படும் நாடகமாக இருக்கக் கூடாது. இவ்வாண்டிலாவது விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தினார்.
25ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை வலியுறுத்திய அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கம் கடந்த காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை நினைவுபடுத்த விரும்புகின்றோம். இந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் எனக் கூறினார்கள். ஒவ்வொரு ஆண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட தினம் அண்மிக்கும் போது ஏதாவதொன்றை செய்வதைப் போன்று, இம்முறை முன்னாள் புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஸ் சலே கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
இது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21ஆம் திகதியை இலக்கு வைத்து அரங்கேற்றப்படும் நாடகமாக இருக்கக் கூடாது. பேராயர் உள்ளிட்ட ஒட்டுமொத்த கத்தோலிக்க மக்களும் அரசாங்கத்தின் இந்த கண்காட்சியை பார்ப்பதற்கு எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே கத்தோலிக்க மக்களில் 99 சதவீதமானோர் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தனர். சலே கைது செய்யப்பட்டதிலோ, அவரை விசாரணைக்கு உட்படுத்துவதிலோ எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.
