Our Feeds


Wednesday, February 25, 2026

Zameera

நாட்டைப் பாதுகாக்கத் தமது உயிரைப் பணயம் வைக்கும் வீரர்கள், அரசியல் தேவைகளுக்கான இலக்குகளாக மாற்றப்படக் கூடாது - திலித் ஜயவீர




 முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு 72 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை, சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர இன்று (13) வன்மையாகக் கண்டித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் போர்வையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமது எக்‌ஸ் கணக்கில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இது குறித்து திலித் ஜயவீர தெரிவித்துள்ளதாவது, 

மேஜர் ஜெனரல் சலே இலங்கையில் மூன்று தசாப்த கால கொடிய பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ஒரு சிறந்த மற்றும் திறமையான இராணுவ அதிகாரி ஆவார். 

இவ்வாறானதொரு அதிகாரியை அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலுக்கு உட்படுத்துவது, அதன் நேர்மை, நோக்கம் மற்றும் அரச அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வது குறித்த கடுமையான கவலைகளை ஏற்படுத்துகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

நம்பகமான சாட்சியங்களுக்குப் பதிலாக, குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், அது நீதியைச் சீர்குலைப்பது மட்டுமன்றி, இலங்கை ஆயுதப் படைகளின் மன உறுதியையும் கடுமையாகப் பாதிக்கும் என அவர் எச்சரித்துள்ளார். 

நாட்டைப் பாதுகாக்கத் தமது உயிரைப் பணயம் வைக்கும் வீரர்கள், அரசியல் தேவைகளுக்கான இலக்குகளாக மாற்றப்படக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

நீதி என்பது வெளிப்படையானதாகவும், பக்கச்சார்பற்றதாகவும், எவ்வித தலையீடுகளும் அற்றதாக இருக்க வேண்டும். அதற்கு மாறாகச் செய்யப்படும் எச் செயலும், அதனைச் செய்பவர்கள் மீது நீங்காத கறையை ஏற்படுத்தும் என சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீர மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Latest
Previous
Next Post »