Our Feeds


Wednesday, February 25, 2026

SHAHNI RAMEES

சுரேஷ் சலேவின் கைது தொடர்பில் அலி சப்ரி "X" தள பதிவு!

 


இன்று இலங்கை இராணுவத்திற்கும் அதன் புலனாய்வுப்

பிரிவிற்கும் ஒரு கவலைக்குரிய நாளாகும் என முன்னாள் வெளிவிவகார மற்றும் நீதி, சிறைச்சாலைகள் விவகார மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 


அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் கைது தொடர்பில் தனது 'X' கணக்கில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 


ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே என்பவர் விடுதலைப் புலிகளின் புலனாய்வு வலையமைப்பை முறியடித்தமை, விடுதலைப் புலிகளின் உயர் தலைவர்களை இலக்கு வைத்துப் புலனாய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தமை மற்றும் 'கே.பி' போன்ற விடுதலைப் புலித் தலைவர்களைக் கைது செய்தமை போன்ற முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு அதிகாரி என முன்னாள் அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார். 


நாட்டிற்கு மிகவும் சவாலான காலப்பகுதிகளில் தமது உயிரைப் பணயம் வைத்துச் சேவையாற்றிய அதிகாரிகள், இன்று அரசியல் விவாதங்களுக்குள் இழுத்து வரப்படுகின்றமை பலரையும் கவலையடையச் செய்யும் ஒரு விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


ஜனநாயக நாடொன்றில் சட்டத்தின் கீழ் பொறுப்புக்கூறல் என்பது அவசியமானது என்ற போதிலும், அது நியாயமான முறையிலும், எல்லைகளுக்கு உட்பட்டும், நிறுவனத்தின் கௌரவத்தை மதிக்கும் வகையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார். 


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொழில்முறை வாய்ந்ததாகவும், சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடாகவும் அமைய வேண்டும். 


ஆனால் அதற்குப் பதிலாக, ஒரு சிக்கலான விசாரணையானது பொதுமக்களுக்கான ஒரு காட்சிப்பொருளாக (Public spectacle) மாற்றப்படுவதையே நாம் அதிகளவில் காணக்கூடியதாக உள்ளதாக முன்னாள் அமைச்சர் தனது X பதிவில் மேலும் தெரிவித்துள்ளார். 


அத்துடன், அரசியல் லாபங்களுக்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப் பயன்படுத்துவதானது, இலங்கையின் நம்பகத்தன்மைக்கும் நீண்டகாலப் பாதுகாப்பு நலன்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். 


தேசியப் பாதுகாப்பானது அரசியல் மோதல்களின் பக்கவிளைவாக மாறிவிடக் கூடாது என முன்னாள் அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார். 


இலங்கை உண்மையையும் நீதியையும் தேடிப் பயணிக்க வேண்டும். ஆனால், அது சட்டம், சாட்சியங்கள் மற்றும் பொறுப்புள்ள தலைமைத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டுமே தவிர, மக்களைப் பிளவுபடுத்துவதற்காகவோ அல்லது திசை திருப்புவதற்காகவோ உருவாக்கப்படும் நாடகத்தனமான நடவடிக்கைகளின் அடிப்படையில் அமையக் கூடாது என முன்னாள் அமைச்சர் அலி சப்ரி இறுதியாக வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »