Our Feeds


Monday, February 23, 2026

Zameera

சந்தைக்கு 3 லட்சம் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம்


 சந்தைக்கு 3 லட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் இன்று (23) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 


3,900 மெட்ரிக் டன் எரிவாயுவை தாங்கிய கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், அதனைத் தரையிறக்கும் பணிகள் நேற்றே ஆரம்பிக்கப்பட்டன. 


மேலும் இரண்டு எரிவாயு கப்பல்கள் எதிர்வரும் 25 மற்றும் 28ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையவுள்ளன. 


இந்நிலையில் இன்று முதல் நாளொன்றுக்கு ஒரு இலட்சம் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 


இதன் மூலம் தற்போது நிலவும் தட்டுப்பாடு படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


போதிய கையிருப்பைப் பேணுவதற்காகப் புதிய கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பெப்ரவரி மாதம் நிறைவடைவதற்குள் அந்த எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன. 


அதேநேரம் எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் அதிகளவிலான லிட்ரோ எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார். 


கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியிருந்ததுடன், பல இடங்களில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது. 


எரிவாயு விநியோகிக்கப்படும் திகதி குறித்து தமக்குச் சரியான தகவல் வழங்கப்படவில்லை என வர்த்தகர்களும் தெரிவித்திருந்தனர். 


எவ்வாறாயினும், 3 இலட்சம் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், சந்தையில் நிலவும் நெருக்கடி நிலை விரைவில் சீராகும் என லிட்ரோ நிறுவனம் உறுதியளித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »