Our Feeds


Tuesday, February 10, 2026

Zameera

பாகிஸ்தான் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி


 இந்தியாவுடன் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தீர்மானித்தமைக்காக, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்க்கு தனது நன்றியைத் தெரிவிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளார். 


அதன்படி, டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி திட்டமிட்டபடி நடைபெறவுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். 


இந்தத் தொடரின் இணை நடத்துனர் என்ற வகையில், சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கும் (ICC) இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் இலங்கை தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. 


அத்துடன், 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் போது இந்தியாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு வழங்கிய ஆதரவை இலங்கை இன்னும் மறக்கவில்லை என்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார். 


இம்முறை டி20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கையில் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்குமாறு பாகிஸ்தான் அரசு அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு அறிவுறுத்தியிருந்தது. 


அட்டவணைப்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி இந்திய அணியுடன் நடைபெறவுள்ள போட்டியில் களமிறங்குமாறு தேசிய கிரிக்கெட் அணிக்கு அறிவுறுத்தியுள்ளதாகப் பாகிஸ்தான் அரசு தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளது. 


கிரிக்கெட் விளையாட்டின் உன்னதத்தைப் பாதுகாக்கவும், இந்த உலகளாவிய விளையாட்டைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப் பங்கேற்கும் அனைத்து நாடுகளுக்கும் ஆதரவளிக்கும் நோக்குடனும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் அரசு சுட்டிக்காட்டியுள்ளது. 


பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இது குறித்துப் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 


எதிர்வரும் 15ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இந்தியாவுடன் நடைபெறவுள்ள போட்டியைப் புறக்கணிக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அந்நாட்டு அரசாங்கம் முன்னதாக அறிவுறுத்தியிருந்தது. 


இவ்வாறானதொரு பின்னணியில், இந்தியாவுடனான போட்டி குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோருக்கு இடையே நேற்று (09) மாலை விசேட தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றது. 


இதன்போது, இந்தியாவுடன் நடைபெறவுள்ள போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைப் பங்கேற்கச் செய்யுமாறு ஜனாதிபதி பாகிஸ்தான் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார். 


இலங்கை பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு வருகை தந்து இந்நாட்டு கிரிக்கெட் விளையாட்டைப் பாதுகாக்க வழங்கிய ஆதரவை ஜனாதிபதி இதன்போது நன்றியுடன் நினைவு கூர்ந்தார். 


இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மற்றனைத்து விடயங்களையும் விட மேலானது என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பாகிஸ்தான் பிரதமரிடம் தெரிவித்துள்ளார். 


ஜனாதிபதியின் இந்தச் சுமூகமான கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும், இலங்கையிடமிருந்து கிடைக்கும் தொடர்ச்சியான ஆதரவுக்குத் தனது நன்றியைத் தெரிவிப்பதாகவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இதன்போது தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »