Our Feeds


Tuesday, February 24, 2026

SHAHNI RAMEES

தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு உறுதி இல்லை – அரசு ‘பொய் நாடகம்’ என ஹரின் பெர்னாண்டோ குற்றச்சாட்டு

 



தோட்டத் தொழிலாளர்களின்  சம்பள அதிகரிப்பு தொடர்பில் எழுத்து மூலமான எந்த உறுதியும்  இல்லை. அதனால் இன்னும் ஒருசில மாதங்கள் சென்ற பின்னர் அதுவும் அரசாங்கத்தின் பொய் நாடகம் என்பது  சமூக மயமாகும்போது தெரியவரும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிச் செயலாளர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.


கொழும்பில் அமைந்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் திங்கட்கிழமை (23) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.


அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,


தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் கொட்டலகயில் இடம்பெற்ற கூட்டத்துக்கு வருகை தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் எனக்கும் அழைப்பு விடுத்திருந்தார். என்றாலும் குறித்த தினம் நான் கொழும்பில் இருந்தமையால் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாமல் போயிருந்தது.


தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது  அதிகரித்து வழங்கப்பட்டிருக்கும் சம்பள அதிகரிப்பு எழுத்து பூர்வமாக இல்லை என்றே பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்து வருகிறார். அந்த சம்பள அதிகரிப்பானது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின்  வேண்டுகோளுக்கமைய, புரிந்துணர்வின் பிரகாரமே தோட்ட நிறுவனங்கள் குறித்த சம்பள அதிகரிப்பை வழங்கி இருக்கின்றன.



ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த சந்தர்ப்பத்திலும் இவ்வாறான கோரிக்கையை தோட்ட நிறுவனங்களுக்கு விடுத்திருந்தார்.. என்றாலும் ரணில் விக்ரமசிங்க குறுகிய காலத்துக்கே ஜனாதிபதியாக இருக்கப்போகிறார்  என்பதால், தோட்ட நிறுவனங்கள் அதற்கு இணங்கவில்லை. தற்போது அநுரகுமார திஸாநாயக்க இன்னும் 4வருடங்களுக்கு ஜனாதிபதியாக இருக்கப்போகிறார். அதனால் தோட்ட நிறுவனங்கள் அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, இந்த மாதத்தில் குறித்த சம்பள அதிகரிப்பு தோட்ட ஊழியர்களுக்கு வழங்கி இருக்கிறது.


தோட்டங்களில் 3இலட்சமாக  இருந்த ஊழியர்கள் தற்போது 60ஆயிரம் வரை குறைந்திருக்கிறது. தோட்டங்களி்ல் இருக்கும் தொழிற்சங்கங்களில் தற்போது உறுப்பினர்கள் இல்லை. அதனால் இந்த துறையை பாதுகாத்துக்கொள்ள வேண்டி  இருக்கிறது. அத்துடன் ஜீவன் தொண்டமானுக்கு இந்த  துறையில் நல்ல அனுபவம் இருக்கிறது.  அதனால் அவர் சம்பள அதிகரிப்பு தொடர்பில்  தெரிவித்து வரும் விடயம் உண்மை. அதனால்  அரசாங்கம் இதுவரை தெரிவித்து வந்த பொய் பிரசாரங்கள் போன்றே தோட்டத் தொழிலாளர்களின்  சம்பள அதிகரிப்பும் இன்னும் ஒருசில மாதங்கள் சென்ற பின்னர் அதுவும் அரசாங்கத்தின் பொய் நாடகம் என்பது  சமூக மயமாகும்போது தெரியவரும் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »