கடந்த கால ஆட்சிக் காலங்களில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பது தற்போது கடினமான காரியமாக மாறியுள்ளது என்றும், அதற்கான சாட்சியங்கள் நுணுக்கமான முறையில் அழிக்கப்பட்டுள்ளதாக அல்லது சிதைக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊழல் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி பகுதியில் நடைபெற்ற கல்வி மறுசீரமைப்பு தொடர்பான கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது:
“ஏதாவது ஒரு மோசடி அல்லது ஊழல் இடம்பெற்று சில மாதங்களில் அல்லது இரண்டு மூன்று வருடங்களில் ஒரு அரசாங்கம் அமைக்கப்பட்டிருந்தால், கிடைக்கப்பெறும் சாட்சியங்களின் அடிப்படையில் அந்த விசாரணைகளை மிக வேகமாக முன்னெடுத்திருக்க முடியும். ஆனால், ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அதே குழுவினர் மேலும் 5 அல்லது 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பின்னரே எமக்கு அரசாங்கம் கிடைத்துள்ளது.”
அந்த நீண்ட காலப்பகுதியில், மோசடிகள் மற்றும் ஊழல்களுடன் தொடர்புடைய சாட்சியங்களை அழிப்பதற்கு அல்லது அவற்றை மறைப்பதற்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சில திறமையான விசாரணை அதிகாரிகளை இடமாற்றம் செய்து விசாரணை கட்டமைப்பை சீர்குலைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
இதன் காரணமாக, மோசடி மற்றும் ஊழல்களைக் கண்டறிவது ஒரு எளிய செயல்முறை அல்ல என்றும், அது மிகவும் கடினமான மற்றும் சிக்கலான நடவடிக்கையாக மாறியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், இன்று எதிர்க்கட்சியினரின் கூச்சல் கேட்கப்படுவதற்கு காரணம், விசாரணைகள் சரியாக முன்னெடுக்கப்படுவதாலேயே என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
