(எம்.ஆர்.எம்.வசீம்)
தூய்மையான அரசியல் ஒன்றை ஏற்படுத்துவதாக ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தில் இருப்பவர்கள், தற்போது நாள்குநாள் ஊழல் மோசடிகளில் சம்பந்தப்பட்டு வருகிறார்கள். ராஜபக்ஷ் குழுவுக்கும் அநுர குமாரவின் குழுவுக்குமிடையில் வித்தியாசம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் நிராேசன் பாதுக்க தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழkமை (1) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டை ஆட்சிசெய்துவந்த அனைவரும் ஊழல் மோசடிகாரர்கள் எனவும் தூய்மையான அரசியல் ஒன்றை கட்டியெழுப்ப அதிகாரத்தை வழங்குமாறு தெரிவித்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்தில் மக்கள் உணரும் வகையில் எதனையும் செய்யவில்லை. அதேநேரம் அரசாங்கத்தில் இருப்பவர்கள் நாளுக்கு நாள், ஊழல் மோசடி சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டு வருகிறார்கள்.
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, கறுப்புப்புப் பட்டியலில் உள்ள நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் ஒருவரின் வங்கி கடன் அட்டையை பயன்படுத்தி இந்தியாவில் வைத்து ஒரு மில்லியனுக்கு பொருட்கள் கொள்வனவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு இல்லைை என்றால் முடியுமானால் அவர் நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும். ஊழல் மோசடி தொடர்பில் இவர்களுக்கும் ராஜபக்ஷ் குழுக்களுக்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறதா என கேட்கிறோம்.
சுங்கத்தில் இருந்து கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டது முதல் தற்போது தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதிவரை பாரியளவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் அரசாங்கம் அனைத்து விடயங்களையும் அரச அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தி, தப்பித்துக்கொள்ளும் நடவடிக்கையையே கையாண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தித்வா அனர்த்தத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு 20 இலட்சம் ரூபா வழங்குவதாக அளித்த வாக்குறுதியின் பிரகாரம் அநுராதபுரத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு 20 இலட்சம் ரூபா அடங்கி காசோலை ஜனாதிபதி கையளித்திருந்தார்.
ஆனால் அந்த காசாேலைகளை பெற்றவர்கள் வங்கியில் கொடுத்தபோது, அந்த வங்கி கணக்குகளில் பணம் இல்லை என, குறுத்த காசோலைகள் மீள பெறப்பட்டிருக்கின்றன. இவ்வாறு 17 காசோலைகள் மீள திருப்பப்பட்டிருக்கின்றன.
ஆனால் அநுராதபுரம் பிரதேச செயலாளர் இதனை நியாயப்படுத்தும் வகையில், காசோலை வழங்கப்பட்டவர்களின் காணியின் உண்மையான உரிமையாளர்கள் அவர்களா? மற்றும் இன்னும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடவில்லை. அதனால் காசோலைகளை வங்கியில் இடவேண்டாம் என நாங்கள் தெரிவித்தோம் என தெரிவித்துள்ளார்.
பிரதேச செயலாளரின் கூற்றின் பிரகாரம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி இருப்பது அவர்களின் காணிகளின் உரித்து தொடர்பில் உறுதிப்படுத்தப்படாத, ஒப்பந்தம் செய்துகொள்ளாத காசோலையாகும். அப்படியானால் ஜனாதிபதி அதிகாரபூரவமற்ற காசோலைகளையே வழங்கி இருக்கிறார். அனுபவம் இல்லாமையே இதற்கு காரணமாகும்.
அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முடியுாது என நாங்கள் ஜனாதிபதி தேர்தலின்போதே தெரிவித்திருந்தோம். தற்போது அது உண்மையாகி வருகிறது. அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டு கூரை தகரம் ஒன்றுக்கு 10 லட்சம் வழங்குவதாக அறிவிப்பு செய்தபோது, அவரால் ஒருபோதும் முடியாது என்பதை உணர்ந்து கொண்டாேம். அதேபோல் ஜனாதிபதியின் அமைச்சர்கள் தற்போது ஊழல் மோசடியில் சம்பந்தப்பட்டு வருவதால், நாடு அராஜக நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறது என்றார்.
