Our Feeds


Tuesday, March 10, 2026

Zameera

ஈரான் கப்பலிலிருந்து மீட்கப்பட்டவர்களை அவர்களின் தாய்நாட்டுக்கு அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் - ரோஹித்த அபேகுணவர்த்தன


 (எம்.ஆர்.எம்.வசீம்)


ஈரான் கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்களை அரசாங்கம் யாருடைய அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், சர்வதேச சட்டத்துக்கமைய அவர்களின் தாய் நாட்டுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்தார்.


ஈரானின் இரண்டாவது கப்பலை பாதுகாப்பதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.


இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,


ஈரானின் இரண்டாவது கப்பலை பாதுகாத்து உயிர்களை பாதுகாப்பதற்கு எடுத்த நடவடிக்கைக்கு அரசாங்கத்துக்கு எமது கெளரவத்தை தெரிவித்துக்கொள்கிறோம். அரசாங்கம் செய்யும் நல்ல விடயங்களை நல்லது  என தெரிவிப்பதற்கு  நாங்கள் ஒருபோதும் கஞ்சப்பட போவதில்லை. கப்பலை பாதுகாக்க எடுத்த உறுதியான தீர்மானம், இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வே எடுத்திருக்கிறார். அவ்வாறான தீர்மானங்களை எடுப்பதற்கு முதுகெலும்பு இருக்கும் தலைவர் இருக்க வேண்டும்.


அதேநேரம் ஈரான் கப்பலில் இருந்தவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்ததுபாேன்று, யாருடைய அழுத்தங்களுக்கும் அடிபனியாது சர்வதேச சட்டங்களுக்கு அமைய அவர்களை அவர்களின் தாய் நாட்டுக்கு அனுப்புவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நடவடிக்கைகும் நாங்கள் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்போம். 


ஏனெனில் இந்த யுத்தத்தில் நாங்கள் யாருடைய பக்கத்தையும் எடுத்துக்கொள்ளாமல் நாங்கள் சுயாதீன நாடு என்பதை உலகுக்கு காட்ட வேண்டும். வல்லரச நாடுகளின் தலைவர்களுக்கு எப்போதும் பொறுமையும் செயற்படும் ஆற்றல் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் தான் நினைத்ததை செய்யும் போக்கு இருக்க முடியாது. கடலில் இருந்த ஈரான் கப்பலை தாக்காமல் அமெரிக்காவுக்கு அதனை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, கைப்பற்றி இருக்கலாம். அதுதான் வல்லரசு நாடுகளின் தலைவர்களின் நடவடிக்கையாக இருந்திருக்க வேண்டும்.


ஆனால் இன்று எங்களுக்கு மனித உரிமை தொடர்பில் கற்றுத்தரும் இவர்கள்தான் அப்பாவி உயிர்களை போக்கி இருக்கிறார்கள். எமது நாட்டில் 2009ல் யுத்தம் முடிவடைந்து தற்போது 2026 ஆகியும் மனித உரிமை மீறியதாக  எமது ராணுவ வீரர்களை தூக்கில் போடுவதற்கு முயற்சித்து வருகிறார்கள். மஹிந்த ராஜபக்ஷ்வை தேடுகிறார்கள். ஆனால் இன்று இவர்கள் காலை முதல் மாலை வரை அப்பாவி உயிர்களை கொன்று வருகிறார்கள். இதன்போது மனித உரிமை என ஒன்றும் பார்ப்பதில்லை. 


அதனால் அரசாங்கம் இந்த யுத்தத்தின்போது யாருடைய பக்கமும் இருக்காமல் சர்வதேச சட்டத்திற்கமை செயற்பட்டு தைரியமாக தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »