இலங்கை தொடரூந்து சேவையை நவீனமயப்படுத்தும்
நோக்கில்,புதிய டிஜிட்டல் பயணச்சீட்டு முறையை அறிமுகப்படுத்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு திட்டமிட்டுள்ளது.இது குறித்து போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவிக்கையில்,பயணிகளுக்கு இலகுவான மற்றும் வினைத்திறனான சேவையை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதற்கென நவீன பயணச்சீட்டு பரிசோதனை உபகரணங்கள் ஏற்கனவே புகையிரத நிலையங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது நடைமுறையிலுள்ள ஒன்லைன் முன்பதிவு முறையை (Online Booking) மேலும் விரிவுபடுத்துவதன் மூலம் இந்தப் புதிய டிஜிட்டல் கட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளது.
இந்த டிஜிட்டல் பயணச்சீட்டு முறையின் முதற்கட்ட முன்னோடித் திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி முதற்கட்டமாக நாரஹேன்பிட்ட,நுகேகொடை,மாகும்புர,ஹோமாகம,பாதுக்கை ஆகிய தொடரூந்து நிலையங்களில் இந்த வசதி நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த முன்னோடித் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இவ்வருட இறுதிக்குள் நாட்டின் ஏனைய அனைத்து தொடரூந்து பாதைகளுக்கும் இந்த டிஜிட்டல் முறையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக தொடரூந்து திணைக்களத்தின் வருமானக் கசிவைத் தடுக்கவும், பயணிகளின் நேரத்தைச் சேமிக்கவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
