Our Feeds


Thursday, April 2, 2026

SHAHNI RAMEES

கொத்மலையில் 70 அடி பள்ளத்தில் கவிழ்ந்து வேன் விபத்து! - ஐவர் படுகாயம்!

 


கொத்மலை, கெரண்டி எல்ல பகுதியில் ஒரே குடும்பத்தைச்

சேர்ந்தவர்கள் பயணித்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 


இன்று (02) அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் வேனில் பயணித்த ஐவர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் இந்திக லலித் தெரிவித்தார். 


நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட இடத்திற்கும், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளான இடத்திற்கும் அருகிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 


மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் காயமடைந்த ஒருவரைப் பார்வையிட்டு விட்டு மீண்டும் கொத்மலை தவலந்தென்ன நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. 


வேனில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மற்றும் ஒரு விற்பனை உதவியாளர் பயணித்துள்ளதாகவும், வேன் உரிமையாளரே அதனை ஓட்டிச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 


சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதன் காரணமாகவே வேன் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகக் குறிப்பிடப்படுகிறது. 


விபத்தில் காயமடைந்த வேன் உரிமையாளரின் மகன் ஒருவர் பிரதான வீதிக்கு வந்து, அந்த வழியாகச் சென்ற கேப் ரக வாகனத்தை நிறுத்தி, தனது தாய், தந்தை மற்றும் உதவியாளரை வைத்தியசாலையில் அனுமதிக்க உதவி கோரியுள்ளார். 


பின்னர் இது குறித்து கொத்மலை பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


-நுவரெலியா நிருபர் செ.திவாகரன்-

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »