தரம் குறைந்த நிலக்கரி கொண்டுவந்திருக்காவிட்டால்
மின்சார கட்டணம் அதிகரிக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. அதேநேரம் அரசாங்கம் மீண்டும் மின்சார கட்டண அதிகரிப்புக்கு செல்ல முற்பட்டால் அது அரசாங்கத்தின் இருப்புக்கே பாதிப்பை ஏற்படுத்திவிடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (5) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
அரசாங்கம் மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு திட்டமிட்டு வருகிறது. தரம் குறைந்த நிலக்கரி கொண்டுவராமல் இருந்திருந்தால், மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. நாட்டுக்கு கோடிக்கணக்கு ரூபா நட்டம் ஏற்பட்டிருக்காது. என்றாலும் இந்த தரம் குறைந்த நிலக்கரி கொண்டுவந்தமை தொடர்பில் அரசாங்கத்தில் இருப்பவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக தரம் குறைந்த நிலக்கரி கொண்டுவந்த கம்பனிகளுக்கு எதிராக தண்டப்பணம் விதிக்கக்கூடாது. அவ்வாறு மேற்கொண்டால், அந்த கம்பனிகள் நிலக்கரி இறக்குமதி செய்வதை நிறுத்தும் அபாயம் இருக்கிறது. அப்படியானால் பெரும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருக்கிறார்.இது திருட்ச் செயலுக்கு ஆதரவளிப்பதாகும். அரசாங்கம் இவ்வாறு செயற்படுவதாக இருந்தால், இவர்களுக்கு அந்த கம்பனிகளுடன் ஏதாவது டீல் இருக்க வேண்டும்.
அதேநேரம் தரம் குறைந்த நிலக்கரி கொண்டுவந்துள்ளமையை அரசாங்கத்தில் இருக்கும் அதிகமானவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அதன் மூலம் நட்டம் ஏற்படவில்லை என்றே தெரிவிக்கிறார்கள். தரம் குறைந்த நிலக்கரி காரணமாக 120 மெகாவோட் மின் உற்பத்தி இலங்கை மின்சார சபைக்கு இல்லாமல் போயுள்ளது. இதனால் இலங்கை மின்சாரசபைக்கு நட்டம் ஏற்பட்டிருப்பது தெளிவாக காணக்கூடியதாக இருக்கிறது. இந்த நட்டத்தை அரசாங்கம் மக்கள் மீது சுமத்தவே முயற்சிக்கிறது. இலங்கை செய்திகள்
இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மக்களுக்கு தெரிவித்த விடயங்களுக்கு மாற்றமாகவே தற்போது செயற்படுகிறார்கள். மின்சார கட்டணத்தை நூற்றுக்கு 33 வீீதம் குறைப்பதாகவே தெரிவித்தார்கள். ஆனால் தற்போது மின்சார கட்டணத்தை அதிகரித்துள்ளதுடன் மீண்டும் கட்டண அதிகரிப்புக்கு செல்ல அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தகவல் கிடைத்து வருகிறது. அரசாங்கம் அவ்வாறு செயற்பட்டால் மக்களுக்கு தலைதூக்க முடியாத அளவுக்கு வாழ்க்கைச் சுமை அதிகரிக்கும் என்பதுடன் அது அரசாங்கத்தின் இருப்புக்கே பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்றார்.
