உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரி சிறையிலிருக்கின்றார். நாட்டில் முன்னெடுக்கப்படும் 'சமாதான நடைபயணம்' போன்ற செயல்பாடுகள் வரவேற்கத்தக்கவை. என்றாலும், நடைபயணம் செல்வது மட்டும் போதாது. சமாதானத்திற்காக நடைமுறையில் எந்தவொரு செயல்பாடும் முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
அத்தனகல்ல பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை (21) இடம்பெற்ற ஒரு நிகழ்வின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு தொடர்ந்தும் பதிலளித்த அவர்,
அனைத்து நல்ல விடயங்களும் அத்தனகல்லவிலிருந்தே ஆரம்பிக்கின்றன. அரசாங்கம் மற்றும் நாட்டு மக்களுக்குத் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன். நாட்டில் முன்னெடுக்கப்படும் 'சமாதான நடைபயணம்' போன்ற செயல்பாடுகள் வரவேற்கத்தக்கவை. என்றாலும், நடைபயணம் செல்வது மட்டும் போதாது. சமாதானத்திற்காக நடைமுறையில் எந்தவொரு செயல்பாடும் முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவில்லை என்றார்.
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலின் நினைவு தினம் குறித்துக் கேட்கப்பட்ட போது, ஈஸ்டர் தாக்குதலின் 'சூத்திரதாரி' அல்லது அதன் பின்னணியில் உள்ள முக்கிய நபர் இப்போது சிறையில் இருக்கிறார் என்று அவர் தெரிவித்தார். இந்தத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்குச் சரியான நீதி வழங்கப்பட்டு சமாதானம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு என்றும் அவர் கூறினார்.
