Our Feeds


Friday, April 24, 2026

Sri Lanka

நடந்தது என்ன? - மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷிதவின் வழக்கு பிற்போடப்பட்டது.



பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபோரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை ஜூன் மாதம் 10ம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் இந்த வழக்கு இன்று (24) அழைக்கப்பட்டது. 


இதன்போது, அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு இணையாக மற்றுமொரு வழக்கு இலக்கம் 08 மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். 


அந்த வழக்கிற்காக திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய இந்த வழக்கிற்கும் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய வேண்டியிருக்கும் என்றும் அரச சட்டத்தரணி சுட்டிக்காட்டினார். 


இது தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை அறிவிப்பதற்காக திகதியொன்றை வழங்குமாறு அரச சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார். 


அதன்படி, இந்த வழக்கினை ஜூன் மாதம் 10 ஆம் திகதி மீண்டும் அழைக்க உத்தரவிட்ட மேல் நீதிமன்ற நீதிபதி, அன்றைய தினம் இது தொடர்பான முன்னேற்றத்தை அறிவிக்குமாறும் கட்டளையிட்டார். 


2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கும் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், ஈட்டிய முறையை வெளிப்படுத்த முடியாத 59 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பணத்தை மூன்று தனியார் வங்கிகளில் நிலையான வைப்பு கணக்குகளில் வைப்பிலிட்டதன் மூலம், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாகக் கூறி, சட்டமா அதிபரால் பிரதிவாதிகளுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை ShortNews ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »