நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, கொழும்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கு இன்று (03) நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கலடுவாவ மற்றும் லபுகம நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் விநியோகிக்கப்படும் பாதுக்க, ஹோமாகம, பெலன்வத்தை மற்றும் பன்னிபிட்டிய உள்ளிட்ட சில பகுதிகளுக்கே இவ்வாறு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
இதற்கமைய நீர் விநியோகம் நிறுத்தப்படும் விபரங்கள் பின்வருமாறு,
பாதுக்கவில் நேற்று (02) இரவு 8 மணி முதல் இன்று (03) இரவு 8 மணி வரை நீர்வெட்டு அமுலில் உள்ளது.
ஹோமாகமவில் இன்று (03) இரவு 8 மணி முதல் நாளை (04) இரவு 8 மணி வரை 24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
பெலன்வத்தையில் நாளை (04) இரவு 8 மணி முதல் நாளை மறுநாள் (05) இரவு 8 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.
மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மூன்று நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறான நீர்வெட்டை அமுல்படுத்த தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.
இருப்பினும், ஏனைய நாட்களில் எவ்வித தடங்கலும் இன்றி நீர் விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக பாதுக்க பகுதிக்கு ஏப்ரல் 7 ஆம் திகதியும், ஹோமாகமவிற்கு ஏப்ரல் 8 ஆம் திகதியும், பெலன்வத்தைக்கு ஏப்ரல் 9 ஆம் திகதியும் மீண்டும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்தச் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
