உதய கம்மன்பிலவின் நூல் வெளியீட்டு விழாவில் கட்சித்
தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்றமைக்கு இம்ரான் மகரூப் எம்.பி கடும் அதிருப்தி!உதய கம்மன்பிலவின் நூல் வெளியீட்டு விழாவில் கட்சித் தலைவர் பங்கேற்றமைக்கு இம்ரான் மகரூப் எம்.பி கடும் அதிருப்தி!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவினால் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய நூல் வெளியீட்டு விழாவில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்கள் கலந்துகொண்டமை தொடர்பில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தனது கடும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
> "உதய கம்மன்பிலவின் நூல் வெளியீட்டு விழாவில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் கலந்து கொண்ட செய்தி எனக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
> உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதி என்ற வகையில், எனது ஆதரவாளர்களும் பொதுமக்களும் எமது கட்சித் தலைவர் இந்த நிகழ்வில் பங்கேற்றதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளவில்லை.
> ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிக்கின்ற அனைத்து இன மற்றும் மதத்தைச் சார்ந்த மக்களும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டும் என்ற ஒரே நிலைப்பாட்டிலேயே உள்ளனர்.
> இவ்வாறானதொரு பின்னணியில், அரசியல் உள்நோக்கம் கொண்டதாகக் கருதப்படும் உதய கம்மன்பிலவின் குறித்த சர்ச்சைக்குரிய நூல் வெளியீட்டு விழாவில் எமது கட்சித் தலைவர் கலந்து கொண்டதை என்னால் ஒருபோதும் நியாயப்படுத்தவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ முடியாது."
>
இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகப்பிரிவு,
இம்ரான் மகரூப் (பா.உ),
திருகோணமலை.
