போர்வீரர்களால் பிரார்த்தனை செய்யப்பட்ட எதிர்காலத்தை உருவாக்குவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதோடு அவர்களின் பிரார்த்தனைகளை ஒருபோதும் வீணடிக்கவோ, காட்டிக்கொடுக்கவோ மாட்டோம் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை போர் வீரர்களின் உன்னத தியாகத்திற்கு அமைதியான, சட்டத்தை மதிக்கும் தேசமே உண்மையான கௌரவம்" எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் சுட்டிக்காட்டினார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள இராணுவ நினைவுத்தூபிக்கு அருகாமையில் இடம்பெற்ற போர் வீரர்கள் தின நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி
யுத்தமும் மோதல்களும் நிறைந்த ஒரு நாட்டை நிராகரிப்பதில் முதன்மையானவர்கள் போர் வீரர்கள் ஆவர் எனத் தெரிவித்த ஜனாதிபதி, யுத்தம் எவ்வளவு அழிவுகரமான மற்றும் பயங்கரமானது என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர் .
அதேபோல், எமது நாட்டை ஒரு அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதும், அனைவருக்கும் சமநீதி மற்றும் சட்டத்தை மதிக்கும் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பி, உலகை வெல்லும் ஒரு நாடாக எமது தாய்நாட்டை மாற்றுவதே அவர்களின் இறுதிப் பிரார்த்தனையாக இருந்தது. அவர்கள் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்தது அந்த உன்னத பிரார்த்தனைகளுடன்தான் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இழந்த வீரமிக்க வீரர்களையும் வீராங்கனைகளையும் நினைவுகூரும் நமக்குச் செய்யக்கூடியது, அவர்கள் செய்த உன்னத தியாகத்திற்கு வெறுமனே கௌரவத்தையோ அல்லது மரியாதையையோ மட்டும் செலுத்திவிட்டு கடந்து போய்விடுவதல்ல என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
அவர்களுக்கு மரியாதையும் கௌரவமும் மட்டும் போதுமானதாகாது. அவர்களால் பிரார்த்தனை செய்யப்பட்ட அந்த அமைதியான, சட்டத்தை மதிக்கும் உன்னத தேசத்தை உருவாக்குவதற்கான பொறுப்பு, உயிரோடு இருக்கும் நம் அனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.
அவர்களால் பிரார்த்தனை செய்யப்பட்ட அந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்றும், அவர்களின் பிரார்த்தனைகளை ஒருபோதும் வீணடிக்கவோ, காட்டிக்கொடுக்கவோ மாட்டோம் என்றும் இந்த போர் வீரர்களின் நினைவுச் சின்னத்தின் முன்னால் நின்று தாம் சத்தியம் செய்வதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.
